கடல்கன்னி ஹிசிகா
கடல்கன்னி ஹிசிகா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது. வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர். கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன்...